Published : 21 Sep 2021 03:19 AM
Last Updated : 21 Sep 2021 03:19 AM
கோவை அருகே சூரிய மின் சக்தி வசதியுடன், மின்சார கார்களுக்கு சார்ஜ் ஏற்றும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது நிலவும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மின்சார வாகனங்களின் மீது மக்களின் கவனத்தை திருப்பி விட்டுள்ளது. மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் மின்சாரத்தில் இயங்கும் கார்களை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. கோவையிலும் மின்சார கார்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கேற்ப, மின்சார வாகனங்களுக்கான ‘எலெக்ட்ரானிக் சார்ஜிங் ஸ்டேஷன்கள்’ (மின்சாரம் நிரப்பும் மையங்கள்) உருவாகத் தொடங்கியுள்ளன. கோவை - பாலக்காடு சாலையில், நவக்கரை அருகே, தனியார் ஓட்டல் வளாகத்தில் சூரிய மின்சக்தியை பயன்படுத்தி, சார்ஜிங் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் பயன்பாடு குறித்து, தனியார் கட்டமைப்பு நிறுவனமான ஏ.கே.ஆர் இன்ஃப்ரா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி சசிக்குமார், துணைத் தலைவர் பிரபு ஆகியோர் கூறும்போது,‘‘ மின்சாரத்தில் இயங்கும் கார்களுக்கு வீடுகளிலேயே, மின்சாரத்தை சார்ஜ் செய்ய பிரத்யேக பிளக் பாயின்ட் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் மூலம் முழுமையாக சார்ஜ் ஏற்ற 10 மணி நேரமாகிவிடும். எங்கள் மையத்தில் ஒரு காருக்கு குறைந்தபட்சம் அரை மணி நேரத்தில் 25 யூனிட் வரை மின்சாரத்தை சார்ஜ் செய்யலாம். ஒரு மின்சார காருக்கு சராசரியாக 30 யூனிட் மின்சாரம் தேவைப்படும். குறைந்தபட்சம் 300 கிலோ மீட்டருக்கு மேல் ஓட்டலாம். வீட்டில் சார்ஜ் செய்யும் போது, காலதாமதம் ஆவதோடு, மின்கட்டணமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, மின்சார வாகனங்களுக்கு, சார்ஜ் செய்யும் வசதியை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். யூனிட்டுக்கு ரூ.22 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எங்களது மையத்தில், சூரியசக்தி மின் தகடை (சோலார் பேனல்) பொருத்தி, அதில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்து, சார்ஜ் செய்யும் வகையில் வடிவமைத்துள்ளோம். பொதுவாக, 20 கிலோ வாட்டில் இருந்து ‘பாஸ்ட் சார்ஜிங்’ கருவி உள்ளது. ஒரு சார்ஜ் ஸ்டேஷனில் 60 கிலோ வாட் வரை கருவி பொருத்திக் கொள்ளலாம். தற்போது இங்குள்ள மையத்தில் 30 கிலோவாட் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ‘நெட்மீட்டரிங்’ மூலம் நாங்கள் சோலார் மின்சாரத்தை, மின்வாரியத்துடன் பரிமாற்றம் செய்து தொகையை கழித்துக் கொள்கிறோம். இந்த மையத்திலுள்ள சார்ஜிங் கருவியில், கியூஆர் கோட் உள்ளது. இதற்கான பிரத்யேக செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து, கியூஆர்கோட் ஸ்கேன் செய்து, தொகை, யூனிட் அளவை உறுதி செய்த பின்னர், கார்களுக்கு சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். செயலி இல்லாவிட்டாலும், இங்குள்ள கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொண்டு தொகையை செலுத்தி சார்ஜ் செய்யலாம். சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க மத்திய அரசு 60 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. இம்மையத்தை நாங்களும் அமைத்துத் தருகிறோம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT