Published : 05 Apr 2021 03:16 AM
Last Updated : 05 Apr 2021 03:16 AM
மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.கதிரவன் நேற்று மாலை தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மண்ணச்சநல்லூரில் மேற்கொண்டார். கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் இருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் மண்ணச்சநல்லூரின் முக்கிய வீதிகளில் சென்று வாக்குசேகரித்த அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பிரச்சாரத்துக்கு சென்ற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மண்ணச்சநல்லூர் தொகுதி முழுவதும் கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித வளர்ச்சி திட்டங்களும் நடைபெறவில்லை. எம்எல்ஏவை மக்கள் பார்க்கவே இல்லை. சாலைகள் சேதமடைந்து உள்ளன. பல இடங்களில் குடிநீர் பிரச்சினை உள்ளது.
நான் வெற்றி பெற்றால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பேன். சேதமடைந்த சாலைகளை தரமாக சீரமைப் பேன். தட்டுப் பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். சமயபுரம், மண்ணச்சநல்லூரில் பேருந்து நிலையங்கள், நீதிமன்றம், அரசு கலைக்கல்லூரி கொண்டு வருவேன். தொகுதியிலுள்ள நீர்நிலைகளுக்கு காவிரி ஆற்றின் உபரிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுத்து, விவசாயத்தை மேம்படுத்துவேன். தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பேன். சமயபுரம் கோயிலுக்கு வரும் பாதசாரிகளுக்கு தனி நடைபாதை அமைத்து தருவேன். நொச்சியத்தில் இருந்து ரங்கத்துக்கு கொள்ளிடத்தில் தரைப்பாலம் அமைத்து தருவேன்.
எங்களுக்கு சொந்தமான மருத்துவமனைகளில் தொகுதி மக்களுக்கு ஒரு பைசா செலவில்லாமல் அனைத்து விதமான சிகிச்சைகளும் இலவசமாக அளிப்போம். மண்ணச்சநல்லூரிலுள்ள அரிசி ஆலைகள் தங்குதடையின்றி இயங்க துணை மின்நிலையம் அமைத்து 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.
தொழில்பேட்டை அமைத்து வேலைவாய்ப்பை பெருக்குவேன் என்றார்.
அப்போது, திமுக மாவட்ட அவைத்தலைவர் அம்பிகாபதி, ஒன்றியச் செயலாளர்கள் இளங்கோவன், கணேசன், செந்தில், ஒன்றியக்குழு தலைவர் தர், துணைத் தலைவர் செந்தில், திமுக நிர்வாகிகள் ஆனந்தன், துரை.ராஜசேகரன், சார்லஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT