Last Updated : 13 Mar, 2021 03:13 AM

 

Published : 13 Mar 2021 03:13 AM
Last Updated : 13 Mar 2021 03:13 AM

போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக - தங்க தமிழ்ச்செல்வனை களமிறக்கிய திமுக :

தற்போது திமுகவில் உள்ள தங்க தமிழ்ச் செல்வன், அதிமுகவில் இருந்தபோதே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வந்தார். கட்சித் தலைமையிடத்தில் ஜெயலலிதா இருந்தநிலையிலும் தேனி மாவட்டத்தில் இருவரும் தனித்தனி அணியாகவே செயல்பட்டனர். இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அமமுகவுக் குச் சென்ற தங்க தமிழ்ச்செல்வன், பின்னர் அதிலிருந்தும் விலகி திமுகவில் சேர்ந் தார். தேனி மாவட்டத்தில் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறார். திமுகவில் ஆரம்பத்தில் கொள்கைப் பரப்புச் செயலாளராகப் பதவி வகித்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு, ஓபிஎஸ்சை நேரடியாக அரசியலில் எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே தேனி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவி தரப்பட்டது.

இத்தேர்தலில் போடியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடுமாறு கட்சித் தலைமை அறிவுறுத்தியது. இதை ஏற்றுக்கொள்ள விரும்பினாலும், ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாதார பலத்தைப் பார்த்து தங்க தமிழ்ச்செல்வன் சிறிது தயங்கியதாகக் கூறப்படுகிறது.

வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு, தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் போன்றவற்றால் சில சமூகங்களுக்கு அதிமுக மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி, பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் முஸ்லிம்களின் வாக்குகள் கிடைக்காத நிலை, பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வு போன்றவற்றால் திமுகவுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது என கட்சி மேலிடத் தலைவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். இதையடுத்தே தங்க தமிழ்ச்செல்வன் போடியில் களமிறக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியினர் தெரிவித்தனர்.

இவரின் போட்டி ஓ.பன்னீர்செல்வத்துக்கு தேர்தல் களத்தில் கடும் நெருக்கடியைத் தரும் என்று திமுகவினர் நம்புகின்றனர்.ஆனால், அதை மறுக்கும் அதிமுக தரப்பினர், ஓ.பன்னீர்செல்வத்துக்கு என்று தனி மரியாதை கட்சியில் மட்டுமின்றி, பொதுவெளியிலும் உள்ளது. அரசு சார்பில் பல்வேறு திட்டங்களை போடியில் செயல்படுத்தி உள்ளார். எந்த தொகுதியிலும் இல்லாத அளவுக்கு ஏராளமான கல்வி நிறுவனங்கனை இங்கு கொண்டு வந்துள் ளார். பல கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாணை வெளியிட்டுள்ளார். வெறும் குற்றச்சாட்டுகளும், ஆவேசப் பேச்சும் இத்தேர்தலில் எடுபடாது என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x