Published : 06 Dec 2021 03:09 AM
Last Updated : 06 Dec 2021 03:09 AM

வேளாண் கூட்டுறவு சங்கம் கடன் தள்ளுபடி செய்ய மறுப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு :

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் த.சுகுமாரை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் வீ.கருப்பையா தலைமையில் நேற்று முன்தினம் விவசாயிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருந்தது:

குருவிக்கரம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைகளை அடகுவைத்துள்ள 36 விவசாயிகளுக்கு வெளியூரில் நிலம் இருப்பதாகவும், அதனால் நகைக்கடன் தள்ளுபடி இல்லை என்றும் கூறி, அடகு வைத்த நகைகளை திருப்பித் தர மறுக்கின்றனர். வெளியூரில் உள்ள நிலங்களுக்கு விவசாயிகளால் என்ஓசி பெற்றுத் தரப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு புதிய நிபந்தனைகளை விதித்து கடன் தள்ளுபடி செய்ய மறுக்கின்றனர். இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தள்ளுபடி கடன் தொகைகளை அரசிடம் இருந்து பெற்றுக்கொண்டு, நகைகளை திருப்பித் தரவேண்டும். மேலும், விவசாய நகைக் கடன் பெற்ற விவசாயிகள் அனைவருக்கும் ஆண்டுக் கணக்கு முடிவதற்குள் புதிய கடன்களை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எம்.வீரப்பெருமாள், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மணக்காடு செந்தில், மதிமுக அவைத் தலைவர் கோ.ராமசாமி, வாத்தலைக்காடு விவசாயிகள் அருள்மணி, சிவகுமார், சுந்தரபாண்டியன், சண்முகநாதன், பிரபு, ராமமூர்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x