Published : 04 Dec 2021 03:11 AM
Last Updated : 04 Dec 2021 03:11 AM
நாகர்கோவில்: `கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறித்து, தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு வெகுமதி வழங்கப்படும்’ என, மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கப்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், தெர்மாகோல் கோப்பைகள், உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிப்பதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், உபயோகிப்பதும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய தொழிற்சாலைகளைக் கண்டறிந்து மூட உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. இருப்பினும், குடியிருப்பு, வணிக நிறுவனங்களுக்குள் சிறிய இடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் இத்தகைய ஆலைகளை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. எனவே, சுற்றுச்சூழல் மீதுஅக்கறை கொண்ட பொதுமக்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் குறித்த தகவல்களை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 80560 42336 என்ற வாட்ஸ்அப் எண், deengl@tnpcb.gov.in என்ற மின்னஞ்சலுக்கு தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசிய தன்மை பாதுகாக்கப்படும். உரிய வெகுமதியும் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT