Last Updated : 04 Nov, 2021 03:13 AM

 

Published : 04 Nov 2021 03:13 AM
Last Updated : 04 Nov 2021 03:13 AM

பெரியாறு அணையிலிருந்து கேரளத்துக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு : 5 மதகுகள் வழியாக 3,981 கன அடி நீர் திறப்பு

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித் துள்ள நிலையில் கேரளப் பகுதிக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு நேற்று மீண்டும் அதிகரிக்கப்பட்டது. 5 மதகுகள் வழியாக 3,981 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கடந்த 29-ம் தேதி கேரளப் பகுதிக்கு அம்மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளால் தன்னிச்சையாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. 13 மதகுகளில் 3 மற்றும் 4-வது மதகுகளின் வழியே விநாடிக்கு 514 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது. மறுநாளே 1,675 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

கனமழை பெய்து 142 அடி உயர வாய்ப்புள்ள நிலையில் கேரள அரசின் இந்தச் செயல் தமிழக விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விவசாயிகள் அதிருப்தி

பெரியாறு அணைப் பிரச்சினையில் மவுனம் காப்பதால் தமிழக அரசு மீது விவசாயிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதைக் கண்டித்து 5 மாவட்ட விவசாயிகள் கேரள மாநில எல்லையில் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.

தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் அதிமுகவும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை அறிவித்துள்ளன.

நேற்று முன்தினம் நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1014 கனஅடியாக குறைக் கப்பட்டது. அதேநேரத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கன மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி விநாடிக்கு 5,083 கன அடி நீர்வரத்து இருந்தது.இதைத் தொடர்ந்து கேரளப்பகுதிக்கு 5 மதகுகள் வழியாக 3,981 கன அடியாக நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டது. அதே போல் தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 2,305 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் நீர்வரத்தால் அணை நீர்மட்டம் 139 அடியாக உயர்ந்துள்ளது.

இதே போல் வைகை அணைக்கு விநாடிக்கு 2,669 கனஅடி நீர் வரத்தும், 1,369 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டும் வருகிறது. அணை நீர்மட்டம் 63 அடியை நெருங்கி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x