Published : 29 Jul 2021 03:15 AM
Last Updated : 29 Jul 2021 03:15 AM
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சிக்கு உட்பட்ட 22-வது வார்டு அசோக்நகர், கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் அரக்கோணம் நகராட்சி அலுவல கத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு வந்த நகராட்சி ஆணையாளர் ஆசீர் வாதம் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பொதுமக்கள் கூறும்போது, ‘‘கஸ்தூரி பாய் தெருவில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்கள் பகுதியில் எந்த அடிப்படைவசதியும் இல்லை.
குறிப்பாக, கால்வாய் வசதி, மின்விளக்கு, குடிநீர், குப்பை தொட்டி அமைத்தல், சாலை வசதி உள்ளிட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் இணையும் வசதிகள் எதுவுமே இல்லாததால் கடந்த 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளோம்.
நகராட்சிக்கு உட்பட்ட மற்ற வார்டுகளில் மேற்கொண்ட பாதாள சாக்கடை திட்டம், காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் அமைத்தல் போன்ற வளர்ச்சிப்பணிகளும் எங்கள் வார்டில் மேற்கொள்ளப்படவில்லை.
ரூ.16 கோடி வசூல் பாக்கி
எங்கள் வார்டையும், தெருவையும் அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக சீரான குடிநீர் விநியோகம் இல்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இதைத்தொடர்ந்து, நகராட்சிக்கு வர வேண்டிய வரிஇனங்கள் ரூ.16 கோடி வசூலிக்கப்படாமல் இருப்பதால் பல வார்டுகளில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளவில்லை.நகராட்சி சார்பில் வரி இனங்கள் வசூலிக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருவதாகவும், நிதி ஆதாரம் கிடைத்தவுடன் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஒவ்வொன்றாக செய்துதரப்படும் என நகராட்சி ஆணையாளர் ஆசீர்வாதம் வாக்குறுதியளித்தார். இதனையேற்று, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT