Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM
தனியார் பள்ளியில் இருந்து குழந்தைகளின் கல்விச் சான்றிதழ்களை பெற்றுத் தரக் கோரி தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பெற்றோர் மனு அளித்தனர்.
பாலக்கோடு வட்டம் அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பெற்றோர் சிலர் நேற்று தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், ‘அனுமந்தபுரம் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் மல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்த 30 மாணவ, மாணவியர் பயின்று வந்தனர். 2020-21-ம் கல்வியாண்டில் இவர்கள் அனைவரும் பத்தாம் வகுப்பு படித்தனர்.
கல்வியாண்டு தொடங்கிய போது குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு பாடப் புத்தகங்களை வழங்கினர். சீருடை, காலணி போன்றவை வழங்கவில்லை. முறையாக ஆன்லைன் வகுப்பும் நடத்த வில்லை.
இந்நிலையில், கரோனா ஊரடங்கால் வருவாய் பாதித்துள்ள பெற்றோர் அனைவரும் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்க்க முடிவு செய்தோம். அதற்காக, பள்ளி நிர்வாகத்திடம் கல்விச் சான்றிதழ்களை கோரினோம். ஆனால், பள்ளி நிர்வாகம் நிலுவைத் தொகை இருப்பதாகக் கூறி அதை செலுத்தினால் தான் சான்றிதழ்களை வழங்க முடியும் எனக் கூறி வருகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகிறோம். மேலும், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, குறிப்பிட்ட தனியார் பள்ளியில் இருந்து எங்கள் குழந்தைகளின் கல்விச் சான்றிதழ்களை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT