Published : 22 May 2021 03:14 AM
Last Updated : 22 May 2021 03:14 AM
திருவண்ணாமலை: மளிகை கடை உட்பட அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் மற்றும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என சேத்துப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்ட பிரபு கேட்டுக் கொண்டுள்ளார்.
தி.மலை மாவட்டம் சேத்துப் பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் கரோனா தடுப்பு குறித்து வணிகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மண்டல துணை வட்டாட்சியர் கோமதி தலைமை வகித்தார். வட்டார சுகாதார ஆய்வாளர் நாகராஜன் வரவேற்றார்.
கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்ட பிரபு பேசும் போது, “கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. அதே நேரத்தில் அத்தியாவசியப் பொருட்கள் தடை இல்லாமல் கிடைக்கும் வகையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மளிகை கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள் போன்றவை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பார்சல் மூலம் உணவு விற்பனை செய்யலாம். மேலும், மருந்தகங்கள் மற்றும் பால் விற்பனை கடைகள் தடையின்றி செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொருட்களை வாங்க வரும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பதை வணிகர்கள் உறுதி செய்ய வேண்டும். விதிகளை பின்பற்றாதவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. மேலும், கடை உரிமையாளர்கள் மற்றும் கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மேலும், கரோனா பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதற்கான சான்றுகளை கடையில் வைத்திருக்க வேண்டும்.
இதன் மூலம் தொற்று உள்ளவர்களை அடையாளம் கண்டு, பரவலை தடுக்க முடியும். இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசின் முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார். இந்த கூட்டத்தில் மளிகை கடை, காய்கறி கடை, பழக்கடை, மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT