Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா கடிதம் அளித்துள்ளதாக ஏனாமில் தகவல் பரவியுள்ளது. இதுபற்றி முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, அதை மறுத்துள்ளார்.
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீண்டும் தனது சொந்த தொகுதியான ஏனாமில் போட்டியிடப் போவதில்லை என அண்மையில் அறிவித்தார். தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும், தான் மட்டுமல்ல, தன்னுடைய குடும்பத்தினர் யாரும்கூட வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் கூறியிருந்தார். திருப்பதி தேவஸ்தான இயக்குநர் பதவிக்கு தனக்கு அழைப்பு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் மல்லாடி கிருஷ்ணாராவ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக முதல்வர் நாராயணசாமியிடம் கடிதம் அளித்துள்ளதாக ஏனாம்பிராந்தியத்தில் தகவல் பரவியது. அவரது ஆதரவாளர்களும் அமைச்சர், தங்களிடம் இத்தகவலை தெரிவித் தார் என்றும், அரசு தரப்பில் தரப்பட்ட வீட்டையும், காரையும் திருப்பி ஒப்படைத்துள்ளதாக குறிப்பிட்டனர்.
சட்டப்பேரவையிலுள்ள அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அலுவலகத்துக்கு சென்று விசாரித்தபோது, அவர் ஏனாம் பிராந்தியத்துக்கு சென்று விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி கேட்க அமைச்சர் மல்லாடியை தொடர்பு கொண்ட போது அவர் தொலைபேசியை எடுக்கவில்லை.
இதையடுத்து சட்டப்பேரவை வளாகத்தில் இருந்த முதல்வர் நாராயணசாமியிடம், ‘அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் ராஜினாமா கடிதம் அளித்துள்ளாரா?’ என்று கேட்டதற்கு அவர், “இல்லை’‘ என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT