Published : 04 Dec 2021 03:08 AM
Last Updated : 04 Dec 2021 03:08 AM

ஈசூர்-வள்ளிபுரம் தரைப்பாலம் துண்டிப்பால் - 30 கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு :

பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஈசூர்-வள்ளிபுரம் தரைப்பாலம் முழுவதுமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் 30 கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பெய்த கனமழையால், பாலாற்றில் 90 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. இதனால், பாலாற்றின் குறுக்கே பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்காக அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலங்கள் முற்றிலும் சேதமடைந்தன.

இதில், திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஈசூர்-வள்ளிபுரம் இடையேயான தரைப்பாலம் முழுவதுமாக சேதமடைந்தது. மேலும், கருங்குழி-திருக்கழுக்குன்றம் இடையேயான போக்குவரத்து தடைபட்டது. இதனால், ஈசூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் படாளம், செங்கல்பட்டு வழியாக திருக்கழுக்குன்றம் செல்லும் நிலை உள்ளது. இதேபோல், மதுராந்தகம் மற்றும் கருங்குழி செல்ல 35 கி.மீ. தொலைவு சுற்றி செல்லும் நிலை உள்ளதால், 30-க்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஈசூர்-வள்ளிபுரம் கிராம மக்கள் கூறியதாவது: தரைப்பாலம் சேதம் காரணமாக கிராம மக்கள் சுற்றி செல்லும் நிலையில், இந்த வழித்தடத்தில் முறையான பேருந்து சேவைகள் இல்லாததால் படாளம் செல்வதற்கு கிராம மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். அதனால், தரைப்பாலத்தை சீரமைக்கும் வரை கிராம மக்களுக்காக மாற்று வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சேதமடைந்த தரைப்பாலத்துக்கு பதிலாக மேம்பாலம் அமைக்க அரசு விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x