Published : 04 Dec 2021 03:10 AM
Last Updated : 04 Dec 2021 03:10 AM

பாலியல் ரீதியான புகாருக்கு உடனடி நடவடிக்கை - ஆசிரியர்களுக்கு நெல்லை ஆட்சியர் அறிவுறுத்தல் :

பள்ளியில் பாலியல் ரீதியான புகாருக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களை திருநெல்வேலி ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் காணொலி மூலம் மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு கலந்துரையாடினார்.

அப்போது ஆட்சியர் பேசியதாவது:

பள்ளிகளில் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் குறித்த புகார்கள் வந்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். நன்னடத்தை இல்லாத மாணவ, மாணவியர் குறித்து தெரியவந்தால் அவர்களை தனியாக அழைத்து பேசி, நல்வழிக்கு கொண்டுவர வேண்டும். கரோனா தொற்று பரவாமல் இருக்க எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மகளிர் தொடர்பான பிரச்சினைகளுக்கு 181 என்ற எண்ணிலும், திருநெல்வேலி சமூக நல அலுவலக ‘சகி’ ஒருங்கிணைப்பு சேவை மையத்தை 0462- 2901241 என்ற எண்ணிலும், குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு 1098 என்ற எண்ணிலும், திருநெல்வேலி தெற்கு பாலபாக்கியா நகரிலுள்ள சரணாலயத்தை 0462-2333678, 2903678 என்ற எண்களிலும், பள்ளி மாணவ, மாணவியர் தொடர்பான பிரச்சினைகளுக்கு 14417 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். இதுகுறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் ஆட்சியர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட சமூக நல அலுவலர் சரஸ்வதி மற்றும் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x