Published : 31 Aug 2021 03:13 AM
Last Updated : 31 Aug 2021 03:13 AM

இடிந்து விழும் நிலையில் தனுஷ்கோடி அரசு நடுநிலை பள்ளி : ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சீரமைக்குமா?

ராமேசுவரம்

ஒன்றரை ஆண்டுகளாகப் பராமரிப்புப் பணி நடைபெறாததால், தனுஷ்கோடியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி இடிந்து விழும் நிலையில் உள்ளது. பள்ளியை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1964-ம் ஆண்டு தனுஷ்கோடி புயலில் அழிந்தது. 40 ஆண்டுகள் கழித்து 2004-ம் ஆண்டில் தான் அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் ஓராசிரியர் பள்ளியை மாவட்ட நிர்வாகம் அமைத்துக் கொடுத்தது. தற்போது 8-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் (2021-22 கல்வியாண்டில்) 65 மாணவர்கள் படிக்கிறார்கள். நான்கு ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். கரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இப்பள்ளி மூடப்பட்டு பாடங்கள் ஆன்-லைன் மூலமே நடத்தப்படுகின்றன.

தற்போது அரசு நடுநிலைப் பள்ளியாக செயல்படும் இப்பள்ளியில் அடிப்படை வசதிகள் கிடையாது. இப்பள்ளிக் கட்டிடம் பைபர் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இது தனுஷ்கோடியின் கடல் காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் கூரை பிய்த்துக் கொண்டு விட்டது. மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த பள்ளிக்கூடத்துக்கு வழங்கப்பட்ட கணினி, தொலைக்காட்சி ஆகியவற்றை மின்சாரம் இல்லாதால் இதுவரை பயன்படுத்தப்படவே இல்லை.

ராமநாதபுரம் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் தனியார் அமைப்பு ஒன்று வழங்கிய சோலார் பேனல்கள் சேதமடைந்துள்ளன. குடிநீர் கிணற்றை தூர் வாராமல் மாசு அடைந்தும், கழிவறைகள் பயன்படுத்த முடியாமல் மணல் மூடியும் காணப்படுகிறது.

இது குறித்து பெற்றோர்கள் கூறியதாவது:

நடுநிலைப் பள்ளிக்காகக் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள், அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட ஆட்சியர் என அனைத்து அதிகாரிகளிடமும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை அகற்றிவிட்டு பள்ளிக்குப் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லையெனில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பமாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x