Published : 16 Jul 2021 03:11 AM
Last Updated : 16 Jul 2021 03:11 AM
பொள்ளாச்சியிலிருந்து கேரளாவுக்கு கடத்தி செல்ல பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த சார் ஆட்சியர், குடோனுக்கு ‘சீல்’ வைக்க உத்தரவிட்டார்.
பொள்ளாச்சி அடுத்த திப்பம்பட்டியில் சண்முகவேல் என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது.
பொள்ளாச்சி செரீப் காலனியைச் சேர்ந்த முகம்மது தவ்பீக் (31) என்பவர் அரிசி வியாபாரம் செய்வதாக கூறி குடோனை வாடகைக்கு எடுத்துள்ளார்.
திப்பம்பட்டி யிலிருந்து கேரளாவுக்கு கடத்தி செல்ல ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பொள்ளாச்சி சார் ஆட்சியர்தாக்கரே சுபம் ஞானதேவ் ராவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சார் ஆட்சியர் தலைமையில் வருவாய் துறையினர் நேற்று குடோனை சோதனையிட்டனர்.
அப்போது, ரேஷன் அரிசியை பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் அங்கிருந்து தப்பியோடினர். குடோனில் பதுங்கியிருந்த முகம்மது தவ்பீக்கை பிடித்து விசாரித்தபோது, பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை குடோனுக்கு கடத்தி வந்து, 25 கிலோ பையில் பேக்கிங் செய்து, சிவகங்கையிலி ருந்து கொண்டு வருவது போல போலி பில் தயாரித்து, சரக்கு ஆட்டோக்களில் ரேஷன் அரிசி மூட்டைகளுக்கு மேல் தனியார் பிராண்டு அரிசி மூட்டைகளை அடுக்கி நூதன முறையில் கேரளா மாநிலம்திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் உள்ள அரிசி வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
தினமும் ரூ.4 லட்சம் மதிப்பிலான 5 டன் ரேஷன் அரிசியை கடந்த சில மாதங்களாக கடத்தி சென்றுள்ளார்.
இதையடுத்து குடோனில் இருந்த 10 டன் ரேஷன் அரிசி மற்றும் 2 சரக்கு ஆட்டோக்களை பறிமுதல் செய்த சார் ஆட்சியர், குடோனுக்கு ‘சீல்’ வைக்கவும், முகமது தவ்பீக்கை கைது செய்யவும் கோமங்கலம் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து முகம்மது தவ்பீக்கை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT