Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

திமுக பிரமுகர் மனைவி தற்கொலை : பிறந்த நாளன்று சோகம்

குடும்பப் பிரச்சினை காரணமாக, திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திமுக மாநில செய்தித் தொடர்பு இணைச் செயலாளராக இருப்பவர் தமிழன் பிரச்சன்னா (41). இவர், எருக்கஞ்சேரி இந்திரா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி நதியா (35). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நதியா, நேற்று காலை வீட்டில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிரசன்னா, குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நதியாவை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், நதியா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நதியாவுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், அதைச் சிறப்பாக கொண்டாடி, புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிட வேண்டும் என்று கணவரிடம் கூறினாராம். அதற்கு பிரசன்னா, கரோனா என்பதால் இந்தாண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் எதுவும் வேண்டாம் என தெரிவித்ததாகவும், இதனால் மனமுடைந்த நதியா, விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இருப்பினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் போலீஸார் விசாரிக்கின்றனர். பிரேதப் பரிசோதனையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கொடுங்கையூர் போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x