Published : 04 Jun 2021 03:14 AM
Last Updated : 04 Jun 2021 03:14 AM
மதுரை மாவட்டம், எஸ்.ஆலங்குளத்தில் ரேஷன் கடை ஊழியர் ஒரே இடத்தில் அமர்ந்து டோக்கன்களை வழங்கியதால் மக்கள் சமூக இடைவெளியின்றி திரண்டனர். இதனால் அப்பகுதியில் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்லது.
எஸ்.ஆலங்குளத்தில் கருப்பையாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் ரேஷன் கடை செயல்படுகிறது. இக்கடையில் எஸ்.ஆலங்குளம், பாரதிபுரம் காலனி, அலமேலு நகர், சக்தி விநாயகர் நகர் பகுதியைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உணவுப் பொருட்களை பெற்று வருகின்றன.
கரோனா ஊரடங்கால் ரேஷன் கடைகளில் 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பை வழங்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதை பெற குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கவும் அரசு அறிவுறுத்தியிருந்தது.
ஆனால், எஸ்.ஆலங்குளம் ரேஷன் கடை விற்பனையாளர், டோக்கன் வழங்க வீடு வீடாகச் செல்லவில்லை. எஸ்.ஆலங்குளம் கிராம மந்தையில் அமர்ந்து டோக்கன்களை வழங்கினார். அதைப் பெற அப்பகுதி மக்கள் அதிக அளவில் திரண்டனர். மக்கள் கூட்டம் அதிகரித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கரோனா பரவலைத் தடுக்க அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில், ரேஷன் கடை ஊழியரே அதை மீறும் வகையில், மக்களை ஒரே இடத்துக்கு வரவழைத்து டோக்கன் வழங்கியுள்ளார். இது தொடர்பாக உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT