Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

பெரியார், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பதவிக் காலம் நீட்டிப்பை ஆளுநர் திரும்பப் பெற வேண்டும் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி வலியுறுத்தல்

சென்னை

சேலம் பெரியார், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு உத்தரவை ஆளுநர் திரும்பப் பெற வேண்டும் என திமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர்களின் பதவிக் காலத்தை நீட்டித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இருவரின் பதவிக்காலமும் நிறைவுற்று, பிரிவு உபசார விழாவும் நடத்தப்பட்டு, பொறுப்புகளை ஒப்படைத்த பிறகு பணி நீட்டிப்பு வழங்கியிருப்பது ஆரோக்கியமானது அல்ல. இது வெளிப்படையான தேர்வு முறைக்கு விடை கொடுக்கும் மிக மோசமான செயலாகும்.

புதிய துணை வேந்தர்களை தேர்வு செய்ய தேர்வுக் குழு அமைக்கப்பட்ட பிறகு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது ஏன்? அதிமுக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதா அல்லது ஆளுநர் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்தாரா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. உயர் கல்வித்துறை செயலாளர் தலைமையில் துணை வேந்தர் பொறுப்புக் குழுவும் அமைக்கப்பட்ட பிறகு, திடீர் பணி நீட்டிப்பு என்பது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பையும், பேராசிரியர்கள்- ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. உயர்கல்வித் துறையை சீரழிக்கும் அதிமுக அரசை ஆளுநர் அமைதியாக வேடிக்கை பார்ப்பது அவர் வகிக்கும் வேந்தர் பொறுப்புக்கு ஏற்றதல்ல.

‘துணை வேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறேன். ஊழலுக்கு இடமில்லை’ என்று அடிக்கடி கூறி வந்த ஆளுநரின் இந்த பணி நீட்டிப்பு உத்தரவு மிகுந்த வேதனை அளிக்கிறது. எனவே, பாரதிதாசன் மற்றும் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பணி நீட்டிப்பு உத்தரவை ஆளுநர் திரும்பப் பெற வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட வேறு எந்த பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் பணி நீட்டிப்பு வழங்கும் முயற்சியில் ஆளுநர் ஈடுபட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x