Published : 16 Dec 2020 03:15 AM
Last Updated : 16 Dec 2020 03:15 AM
கோவை மாவட்டம் பூலுவப்பட்டியில், பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத் துறையின் மூலம், நொய்யல் ஆற்றை விரிவாக்குதல், புனரமைத்தல், நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்து பேசும்போது, ‘‘2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, வேளாண் துறைக்கு ரூ.11 ஆயிரத்து 894 கோடியே 48 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே வேளாண் துறைக்கு, அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் மாநிலம் தமிழகம்தான். அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் தமிழகத்தில் 2-ம் பசுமைப் புரட்சி ஏற்பட்டு வருகின்றது. தமிழக முதல்வர் நொய்யல் ஆற்றை சீரமைக்க ரூ.230 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். இதில் கோவையில் மட்டும் நொய்யல் ஆற்றின் 72 கிலோ மீட்டர் நீளத்தை சீரமைக்க ரூ.174 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சிங்காநல்லூர், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒரு லட்சம் பாசன நிலங்கள் புத்துயிர் பெறும். நொய்யல் ஆற்றின் கிளை நதிகளாக உள்ள இருட்டுப்பள்ளம், உரிப்பள்ளம், கள்ளிப்பள்ளம், தென்னமநல்லூர் பள்ளம், தென்கரைப் பள்ளம் ஆகிய இடங்களில் நிலத்தடி நீர் செறிவூட்டும் தடுப்பணைகளும், நீலி அணைக்கட்டு, சித்திரைச்சாவடி அணைக்கட்டு, கோவை அணைக்கட்டு, குறிச்சி அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் புனரமைப்பு பணிகளும் நடந்து வருகின்றன. நொய்யல் ஆற்றில் உள்ள 23 அணைக்கட்டுகளில் பழுதடைந்த 18 அணைக்கட்டுகள் சீரமைக்கப்படுகின்றன. விவசாயிகளின் காவல் அரணாக தமிழக அரசு செயல்படுகிறது’’ என்றார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT