Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணிக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
ஆளும் திரிணமூல் காங்கிரஸின் வேட்பாளர் பட்டியலை முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்று வெளியிட்டார். 291 தொகுதிகளில் திரிணமூல்வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ள னர். மீதமுள்ள 3 தொகுதிகளில் கூட்டணி கட்சி போட்டியிடுகிறது. கடந்தமுறை போவானிபூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதல்வர் மம்தா, வரும் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். வரும் 10-ம் தேதி அவர் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
திரிணமூல் காங்கிரஸில் 100 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 24 எம்எல்ஏக்களுக்கு இந்த முறை தொகுதி ஒதுக்கப்படவில்லை. வேட்பாளர் பட்டியலில் 50 பெண்கள், 42 முஸ்லிம்கள் இடம்பெற்றுள்ளனர். வேட்பாளர்கள் அனைவரும் 60 வயதுக்கு உட்பட்டவர்கள்.
முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறும்போது, "மேற்குவங்கத்தின் வரலாறு, கலாச்சாரம் தெரியாதவர்கள் மாநிலத்தை ஆள முடியாது. மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
இதை மாற்றி 294 கட்டங்களாக தேர்தல் நடத்தினாலும், பிரதமர் நரேந்திர மோடி 120 கூட்டங்களில் பங்கேற்றாலும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரியில் இருந்து மேற்குவங்கத்தில் மத்திய படைகளை குவித்தாலும் கவலையில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் அபார வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT