Published : 06 Aug 2021 03:19 AM
Last Updated : 06 Aug 2021 03:19 AM
பஞ்சாபில் அமரிந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் பஞ்சாப் முதல்வரின் முதன்மை ஆலோசகராக பதவி வகித்து வந்தார். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் முதல்வர் அமரிந்தர் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், “பொது வாழ்க்கையிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். என்னுடைய எதிர்கால நடவடிக்கை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. எனவே, முதன்மை ஆலோசகர் பதவியிலிருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
பஞ்சாபில் அமரிந்தர் சிங்குக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் பிரசாந்த் கிஷோர் இந்த முடிவை எடுத்திருப்பது அமரிந்தர் சிங்குக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. வரும் 2024-ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளன. இதற்கான முயற்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். தேசிய அரசியலில் கவனம் செலுத்துவதற்காக அமரிந்தர் சிங்கின் ஆலோசகர் பதவியிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகி இருக்கலாம் என கூறப்படுகிறது. -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT