Published : 01 Jul 2021 03:14 AM
Last Updated : 01 Jul 2021 03:14 AM
திட்டமிட்ட சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடையை ஜூலை 31-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதைத் தடுப்பதற்காக கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி திட்டமிட்ட சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ஆனால், வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்கள் நாடு திரும்பவும் இங்கு சிக்கிய வெளிநாட்டினர் சொந்த நாட்டுக்கு திரும்பவும் வசதியாக மே மாதம் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 27 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது.
இந்நிலையில், சர்வதேச விமான சேவைக்கான தடை வரும் ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) நேற்று அறிவித்தது. அதேநேரம் சில குறிப்பிட்ட வழித்தடங்களில் திட்டமிடப்பட்ட பயணிகள் விமான சேவை அனுமதிக்கப்படும் என டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT