Published : 09 Dec 2021 03:07 AM
Last Updated : 09 Dec 2021 03:07 AM

கோரிக்கையை மத்திய அரசு ஏற்றதால் - போராட்டம் வாபஸ் குறித்து விவசாயிகள் இன்று முடிவு :

புதுடெல்லி

பிரதமர் மோடி அறிவித்தபடி கடந்த 29-ம் தேதி நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டன. எனினும் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில், விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆனால், வழக்குகளை வாபஸ் பெற்றால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இதையும் நேற்று மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, போராட்டத்தைவாபஸ் பெறுவது குறித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா இன்று முடிவு செய்து அறிவிக்க உள்ளது.

சம்யுக்த கிசான் மோர்ச்சா வெளியிட்ட அறிக்கையில், ‘‘மத்திய அரசின் அதிகாரப்பூர்வ கடிதத்துக்காக காத்திருக்கிறோம். டெல்லி சிங்கு பார்டரில் சம்யுக்த கிசான் மோர்ச்சா நிர்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை (இன்று) நடைபெறும். அப்போது போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து முடிவு செய்யப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x