Published : 08 Dec 2021 04:07 AM
Last Updated : 08 Dec 2021 04:07 AM

பள்ளி, கல்லூரிகள் அருகே - கஞ்சா விற்பனையை ஒழிக்க நடவடிக்கை : ஆணையர்கள், எஸ்.பி.களுக்கு டிஜிபி உத்தரவு

பள்ளி, கல்லூரிகள் அருகே நடக்கும் கஞ்சா விற்பனையை ஒரு மாதத்தில் ஒழிக்க வேண்டும் எனஅனைத்து மாவட்ட போலீஸாருக்கும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்துமாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒரு மாதத்துக்குள்...

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள், லாட்டரி விற்பனையை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த மாதம் 6-ம் தேதிவரை ஒரு மாதத்துக்கு கஞ்சா மற்றும் லாட்டரி வேட்டை நடத்த வேண்டும்.

கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை செய்பவர்களை அடையாளம் கண்டு தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். போதைப் பொருள் விற்பனை சங்கிலியை உடைக்க மொத்த கொள்முதல், விற்பனை செய்யும் நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்களை மீட்க வேண்டும்

மேலும், போதைப் பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை அடையாளம் கண்டு, மனநலஆலோசகர் மூலம் மீட்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களைக் கொண்டு காவல் ஆய்வாளர்கள் வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்கி ரகசிய தகவல்களை சேகரித்து போதைப் பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். ரயில்வேகாவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் டிஜிபி குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x