Published : 08 Dec 2021 04:07 AM
Last Updated : 08 Dec 2021 04:07 AM

விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு நாடாளுமன்றத்தில் ராகுல் வலியுறுத்தல் :

புதுடெல்லி: மக்களவை நேற்று காலை தொடங்கியதும், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். இதற்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், “போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகள் குறித்த எந்த தகவலும் அரசிடம் இல்லை. அப்படியிருக்கும் போது, அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ராகுல் காந்தி பேசியதாவது: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஓராண்டாக நடைபெற்ற போராட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட அப்பாவி விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால், அவர்களின் விவரங்கள் இல்லை என அரசு அலட்சியமாக பதிலளிக்கிறது. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு பஞ்சாப் அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. எனவே பஞ்சாப் அரசிடமிருந்து அந்த விவசாயிகளின் விவரங்களை பெற்று மக்களவையில் விரைவில் சமர்ப்பிப்பேன். அதேபோல, ஹரியாணா அரசிடம் இருந்தும் விவசாயிகளின் விவரங்களை பெற்று தருகிறேன். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடும், குடும்ப உறுப்பினர்களுக்கு அரசுப் பணியும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x