Published : 01 Dec 2021 06:38 AM
Last Updated : 01 Dec 2021 06:38 AM
கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் பரிவர்த்தனை தொடர்பாக புதிய மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான நேற்று மாநிலங்களவையில் பலத்த அமளிக்கிடையே அவர் இத்தகவலைத் தெரிவித்தார். பாஜக உறுப்பினர் சுஷில்குமார் மோடி கேள்வி நேரத்தின்போது, கிரிப்டோ கரன்சி தொடர்பாக தவறான விளம்பரங்கள் வெளியாகின்றன. தற்காலிகமாக இதுபோன்ற விளம்பரங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா என்று கேள்வியெழுப்பினார். கடந்த முறையும் கிரிப்டோ கரன்சியை முறைப்படுத்தும் மசோதா தாக்கல் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர், மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைத்த பிறகு புதிய மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறினார். கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையானது மிகவும் சிக்கல் நிறைந்தது. ஆனால் அதற்கு இதுவரையில் எவ்வித கட்டுப்பாட்டு வரையறையும் விதிக்கப்படவில்லை. அது எந்த வரையறைக்குள்ளும் வரவில்லை என்றார். அதேசமயம் விளம்பங்களுக்குத் தடை விதிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார். இருப்பினும் கிரிப்டோ கரன்சி மற்றும் பிட்காயின் வர்த்தகம் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மற்றும் பங்கு பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையம் (செபி) ஆகியன மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
என்எப்டி-யை முறைப்படுத்து வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
(என்எப்டி எனப்படுவது மற்றவருக்கு பரிமாற்றம் செய்ய முடியாத அதேசமயம் டிஜிட்டல் பதிவேட்டில் தகவலாக பதிவு செய்யும் முறையாகும். இதற்கு பிளாக்செயின் என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. வழக்கமாக புகைப்படங்கள், வீடியோக்கள், இசை ஆல்பங்கள் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் கோப்புகளாக சேமிக்க முடியும். என்எப்டி என்பது வெளிப்படையாக மற்றவருக்குக் காட்டக் கூடிய அதாவது குறிப்பிட்ட தகவல் தொகுப்புக்கு தான் உரிமையாளர் என்பதைக் காட்டுவதற்கான ஆதாரம்தான் என்எப்டி எனப்படுகிறது.)
உலகம் முழுவதும் என்எப்டி வடிவில் கிரிப்டோ கரன்சி இருப்பதால் இதற்கு மிகப்பெரிய வரவேற்பும் சந்தை மதிப்பு அதிகரிக்கவும் காரணமாக அமைந்தது. இதில் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமலிருக்கவும், கிரிப்டோ வர்த்தகர்கள் நுட்பமாக கண்காணிக்கப்படு வதாகவும் கூறிய அமைச்சர், முத லீட்டாளர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று கூறினார்.
கிரிப்டோ கரன்சி மற்றும் முறைப்படுத்தல் டிஜிட்டல் கரன்சி மசோதா 2021 உட்பட 26 புதிய மசோதாக்கள் நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT