Published : 30 Nov 2021 03:06 AM
Last Updated : 30 Nov 2021 03:06 AM

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து - நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம் : விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அமளிஇரு அவைகளும் நாள்முழுவதும் தள்ளிவைப்பு

பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தபடி மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. மசோதா குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதிகளை ஏற்படுத்தித் தருதல்) சட்டம், விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம், வேளாண் சேவைகள் ஒப்பந்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்கள் கடந்த ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இதை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓராண்டாக போராட்டம் நீடித்து வந்த நிலையில், கடந்த 19-ம் தேதி நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மக்களவை கூடியதும் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். அதன்பின், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். கடும் அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

ரத்து மசோதா

மக்களவை மீண்டும் கூடியதும் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வகை செய்யும் ‘வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா 2021’-ஐ வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். அவர் பேசும்போது, ‘‘அரசியல் ஆதாயத்துக்காக வேளாண் சட்டங்களை எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. இந்த சட்டங்களின் நன்மைகளை சில விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. எனவே, வருத்தத்துடன் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்கிறோம்’’ என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, ‘‘போராட்டத்தின்போது 700 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். லக்கிம்பூர் கலவரத்தில் விவசாயி கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த விவ காரங்கள் தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

மசோதா குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்தனர். இதை அவைத் தலைவர் ஏற்கவில்லை. மதியம் 12.06 மணிக்கு தாக்கல் செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா, 4 நிமிடங்களில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இதன்பிறகு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை காலையில் கூடியதும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடியதும் மதியம் 2 மணி அளவில் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவை வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார்.

அதன்மீது விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அவைத் தலைவரான வெங்கய்ய நாயுடு ஏற்கவில்லை. மதியம் 2.15 மணிக்கு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேறிய பிறகும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப் பட்டது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ‘வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா 2021’, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு அரசாணை வெளியிடப்படும். இதன்மூலம் வேளாண் சட்டங்கள் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படும்.

இதனிடையே, டெல்லியில் பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் டிகைத் கூறும்போது, ‘‘குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். அதுவரை போராட்டம் தொடரும்’’ என்றார்.

சோனியா, ராகுல் ஆர்ப்பாட்டம்

கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் இடையே ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x