Published : 27 Nov 2021 03:08 AM
Last Updated : 27 Nov 2021 03:08 AM

சிப்பிப்பாறை பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை : உயர் நீதிமன்றத்தில் தகவல்

சிப்பிப்பாறை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

விருதுநகர் சிப்பிப்பாறையைச் சேர்ந்த சிவ பாலசுப்ரமணியன், கிருஷ்ணவேணி உள்பட 6 பேர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

சிப்பிப்பாறை ராஜம்மாள் பட்டாசு ஆலையில் 20020 மார்ச் 20-ல் நடந்த விபத்தில் உறவினர்கள் 6 பேர் இறந்தனர். இதனால் எங்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் மற்றும் தற்காலிகமாக ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

ஆனால், இதுவரை மத்திய, மாநில அரசுகள் எந்தவித நிவாரணமும் தரவில்லை. இதனால் அரசு அறிவித்தபடி ரூ.10 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் குறித்து விவரம் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கு இழப்பீடு வழங்க விருதுநகர் ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார் என்றார். இதையடுத்து விசாரணையை டிச. 6-க்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x