Published : 26 Nov 2021 03:10 AM
Last Updated : 26 Nov 2021 03:10 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் 45 கூரை வீடுகள், 14 ஓட்டு வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இதில், பூதலூர் அருகே சின்னமுத்தாண்டிப்பட்டியைச் சேர்ந்த சலீம் தனது வீட்டில் மகன் அசாருதீனுடன்(5) தூங்கிக்கொண்டிருந்தபோது, மழையில் ஊறியிருந்த வீட்டின் மண் சுவர் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி அங்கேயே அசாருதீன் இறந்தார். காயமடைந்த சலீமை அக்கம் பக்கத்தினர் மீட்டு, தஞ்சை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதேபோல, பேராவூரணி அருகே பூங்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த வைத்தி மனைவி சிவபாக்கியம்(85). தனது இளைய மகன் ரவிச்சந்திரனின் மாடி வீட்டின் அருகே, தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்தார். மழையால் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மண் சுவர் இடிந்து, சிவபாக்கியம் மீது விழுந்ததில், அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார், பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன் உள்ளிட்டோர் நேற்று அங்கு சென்று சிவபாக்கியத்தின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT