Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

ஜோலார்பேட்டை அருகே ஆசிரியரை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் :

திருப்பத்துார் மாவட்டம் ஜோலார் பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்தப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஆறுமுகம் என்பவர் மாணவர்களை தரக்குறைவாக நடத்துவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பள்ளியில் படிக்கும் 3-ம் வகுப்பு மாணவன் சிறுநீர் கழிக்க வெளியே அனுமதிக்குமாறு ஆசிரியர் ஆறுமுகத்திடம் கேட் டுள்ளார். ஆனால், அதற்கு ஆசிரியர் அனுமதி வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது.

மேலும் சிறுநீர் கழிக்க வெளியே செல்ல வேண்டும் என்றால் நூறு தோப்புக்கரணம் போடவேண்டும் என கூறி மாணவரை தோப்புக்கரணம் போட வைத்தார். 15 தோப்புக்கரணம் போடுவதற்குள் மாணவர் வகுப்பறையிலேயே சிறுநீர் கழித்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் ஆறுமுகம், மாணவரை பிரம்பால் சரமாரியாக அடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, வீட்டுக்கு சென்ற மாணவர் வகுப்பறையில் நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு சிறுவனின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தகவலறிந்த ஜோலார்பேட்டை காவல் துறையினர் பள்ளிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையேற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் கேட்ட போது, பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்தி ஆறுமுகத்தின் மீது துறை ரீதியான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x