Published : 24 Nov 2021 03:08 AM
Last Updated : 24 Nov 2021 03:08 AM

கிருஷ்ணகிரி அருகே விபத்தில் - திருமணமான ஒரே நாளில் புது மாப்பிள்ளை உயிரிழப்பு :

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே லாரியின் பின்னால் கார் மோதிய விபத்தில் திருமணமான ஒரே நாளில் புது மாப்பிள்ளை உயிரிழந்தார். 3 பேர் காயம் அடைந்தனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசலு (38). இவருக்கும் சென்னையைச் சேர்ந்த கனிமொழி (32) என்பவருக்கும் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் மனைவி மற்றும் உறவினர்களுடன் சீனவாசலு, நேற்று முன்தினம் காரில் பெங்களூருவில் இருந்து சென்னையில் உள்ள மாமனார் வீட்டிற்குச் சென்றார். காரை சீனிவாசலு ஓட்டினார்.

கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுண்டம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நள்ளிரவு 12.10 மணிக்கு ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், சீனிவாசலு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். கனிமொழி படுகாயங்களுடன், பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், உறவினர்கள் சுமலதா (30), ரிஷிகா (21) ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். இதுதொடர்பாக கந்திகுப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x