Published : 23 Nov 2021 03:06 AM
Last Updated : 23 Nov 2021 03:06 AM

கரூரில் வாகன சோதனையின்போது - வேன் மோதி மோட்டார் வாகன ஆய்வாளர் உயிரிழப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.50 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

கனகராஜ்

கரூர்/சென்னை

கரூரில் நேற்று வாகன சோதனையின்போது வேன் மோதி மோட்டார் வாகன ஆய்வாளர் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த இனுங்கனூரைசேர்ந்தவர் கனகராஜ்(57). இவர் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில், பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கரூர் வையாபுரி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், இவர் தனதுஅலுவலகம் அருகேயுள்ள வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தின்கீழ் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியே வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்த முயன்றபோது, அந்த வேன் கனகராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த கனகராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தகவலறிந்த எஸ்பி சுந்தரவடிவேல் உடனடியாக சம்பவம் நிகழ்ந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டார்.

இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதி கடைகளில் உள்ள சிசிடிவி கேமராவில், கனகராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றவேன் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்து, அந்த வேனை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

முதல்வர் இரங்கல்

உயிரிழந்த வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துஉள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “கனகராஜ் வாகனம் மோதி உயிரிழந்தசெய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். இச்சம்பவத்தில் இறந்த கனகராஜ் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல், வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு அரசு சார்பில் முதல்வர் பொதுநிவாரண நிதியில் இருந்து ரூ.50 லட்சம் நிதிஉதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x