Published : 23 Nov 2021 03:07 AM
Last Updated : 23 Nov 2021 03:07 AM

அரசுப் பள்ளி மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட - ரூ.20 லட்சம் நிதியை திரும்ப பெற்றதற்கு பெற்றோர் எதிர்ப்பு :

உடுமலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக்கூடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் ‘மாதிரி பள்ளி’ அமைத்து ஆங்கில வழி கல்வி அளிக்க அரசு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கியது. ஆனால் திட்டப் பணிகளை தொடங்குவதற்கு முன்னதாகவே ஒதுக்கிய நிதியை அரசு திரும்பப் பெற்றுக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி இப்பள்ளி மாணவிகள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் ஒதுக்கிய நிதியைக் கொண்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்தியிருக்க வேண்டும் என்ற ஆதங்கமும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து பெற்றோர் கூறும்போது, ‘‘கூலி வேலை செய்வோர், கட்டிடத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சிறுபான்மையின மக்களின் குழந்தைகள் இப்பள்ளியில் அதிக அளவில் பயின்று வருகின்றனர். மாதிரி பள்ளிக்காக அரசு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கியது.ஆனால் அந்த நிதியைக் கொண்டு எந்த பணியும் செய்யவில்லை. மாறாக அது கல்வி அதிகாரிகளின் வற்புறுத்தல் காரணமாக திரும்ப அனுப்பப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது. இப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் இல்லை. நவீன கழிப்பிட வசதி தேவை. மாணவிகளுக்கு தானியங்கி ‘நாப்கின்’ வழங்கும் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள் உள்ளன. எனவே ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் அளிப்பதோடு, கூடுதல் நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்,’’ என்றனர்.

இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறும்போது, ‘‘உடுமலை மட்டுமல்லாது மாவட்டத்தில் 3 பள்ளிகளுக்கு மாதிரிப் பள்ளிக்கான நிதி ஒதுக்கப்பட்டது. கரோனா ஊரடங்கின் போது பள்ளிகள் இயங்கவில்லை. மாதிரிப் பள்ளி திட்டமும் முடங்கியது. சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி துறைக்கே இந்த நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த நிதி மீண்டும் பள்ளிகளுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது,’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x