Published : 23 Nov 2021 03:07 AM
Last Updated : 23 Nov 2021 03:07 AM
பள்ளிப்பட்டு அருகே சொரக்காய்பேட்டை அரசு பள்ளி வகுப்பறையில் திடீரென்று 10 அடி ஆழத்துக்கு ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது. விரைவில் இதை சீரமைக்க, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் கொசஸ்தலை, கூவம், ஆரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன.
இந்நிலையில், பள்ளிப்பட்டு அருகே சொரக்காய்பேட்டையில் கொசஸ்தலை ஆற்றின்கரை அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் மழைநீர் புகுந்தது. இதன் காரணமாக கடந்த வாரம் பள்ளிச் சுற்றுச் சுவர், நீரேற்றும் அறை ஆகியவை சேதமடைந்தன. மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன.
இந்நிலையில் விடுமுறைக்குப் பிறகு நேற்று காலை சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது. அப்போது, பள்ளி கட்டிடத்தில் உள்ள ஒரு வகுப்பறையில் திடீரென்று 10 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால், அந்த வகுப்பறையில் இருந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக பள்ளி நிர்வாகம் பள்ளியின் அனைத்து மாணவர்களையும் வெளியேற்றி, பள்ளிக்கு விடுமுறை அறிவித்தது.
இதுகுறித்து, தகவலறிந்த கல்வித் துறை அதிகாரிகள், பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து, பள்ளி வகுப்பறையில் ஏற்பட்டுள்ள பள்ளம் குறித்து ஆய்வு செய்தனர். மேலும், சேதமடைந்த பள்ளிக் கட்டிடத்தை விரைவில் சீரமைத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, “மிக விரைவில் சேதமடைந்த பள்ளி வகுப்பறையை சீரமைத்து தருவதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகவே, அப்பணி விரைவில் தொடங்கி முடிவுக்கு வரும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT