Published : 23 Nov 2021 03:09 AM
Last Updated : 23 Nov 2021 03:09 AM

கூட்டுறவுத் துறை அதிகாரிகளை கண்டித்து தஞ்சாவூரில் அதிமுகவினர் சாலை மறியல் :

தஞ்சாவூர்: தஞ்சாவூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நிர்வாகக்குழு கூட்டத்துக்கு வராத கூட்டுறவுத்துறை அதிகாரிகளை கண்டித்து, அதிமுகவினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை (காவேரி சிறப்பங்காடி) தலைவராக வி.பண்டரிநாதன் உள்ளார். இவர், அதிமுகவிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு விலகி, திமுகவில் இணைந்தார். இந்நிலையில், பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டுள்ள பண்டரிநாதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என, அதிமுகவைச் சேர்ந்த கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் இயக்குநர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ் உள்ளிட்ட 16 பேர் கையெழுத்திட்டு, அக்.25-ம் தேதி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அதுதொடர்பாக, தஞ்சாவூர் சரக கூட்டுறவு சார்பதிவாளர் சா.ஜெயசுதா முன்னிலையில் சிறப்பு கூட்டம் நடத்தி, தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நவ.22-ம் தேதி (நேற்று) விவாதிக்க உள்ளதாக, நவ.10-ம் தேதி கூட்டுறவு இயக்குநர்களுக்கு கடிதம் ஒன்றை இணைப்பதிவாளர் அனுப்பியுள்ளார். அதன்படி, இயக்குநர்கள் நேற்று சிறப்பு கூட்டத்தை நடத்தினர். இந்தக் கூட்டத்துக்கு அதிமுகவைச் சேர்ந்த 16 இயக்குநர்கள் வந்திருந்தனர். ஆனால், கூட்டத்தை மேற்பார்வையிட வேண்டிய கூட்டுறவுத்துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதுகுறித்து அறிய துறைசார்ந்த அதிகாரிகளை தொடர்புகொண்டபோது, அவர்களது செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால், ஆத்திரமடைந்த அதிமுக இயக்குநர்கள் 16 பேர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் தஞ்சாவூர் ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தஞ்சாவூர் மேற்கு போலீஸார், மறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x