Published : 22 Nov 2021 03:08 AM
Last Updated : 22 Nov 2021 03:08 AM

பயறு வகை விதைப் பண்ணைகள் : விவசாயிகள் அமைக்க அறிவுறுத்தல்

தூத்துக்குடி விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் ச.அசோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மானாவாரி பருவத்தில் அதிக மகசூல் பெற குறைந்த வயது உடைய உளுந்து மற்றும் பாசிப் பயறு ரக விதை உற்பத்தி செய்யலாம்.

பயறு வகை விதைகளில் புரதச்சத்து அதிகம் உள்ளதால் உளுந்து பயரில் வம்பன்- 8, எம்டியு- 1, கோ- 6, வம்பன்- 6 ரகங்களும், பாசிப்பயறு பயிரில் கோ- 7, கோ- 8, வம்பன்- 4 ரகங்களும் விதை உற்பத்திக்கு பயன்படுத்தலாம்.

இவை பூச்சி நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு தன்மை உடையவை. ஒரே நேரத்தில் பூக்கும் தன்மை உடையதால் அறுவடை நேரத்தில் விதைகள் உதிருவது தடுக்கப்படுகிறது. விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் விதைப்பண்னை பதிவு கட்டணமாக ஒரு அறிக்கைக்கு ரூ. 25-ம், ஒரு ஏக்கர் விதைப்பண்ணை ஆய்வு கட்டணம் ரூ. 50 மற்றும் பரிசோதனை கட்டணம் ரூ.30 செலுத்த வேண்டும்.

விதைப்பு அறிக்கை மூன்று நகல்களில் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். விதைப்பண்ணைகள் விதைச்சான்று அலுவலரால் பூக்கும் பருவம் மற்றும் காய் முதிர்ச்சி பருவத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.

தானிய பயறு வகை விலையை விட, சான்று பெற்ற விதைக்கு அதிக விலை கிடைக்கிறது. எனவே, விவசாயிகள் நடப்பு மானாவாரி பருவத்தில் பயறு வகை விதைப்பண்ணைகள் அமைத்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x