Published : 21 Nov 2021 03:06 AM
Last Updated : 21 Nov 2021 03:06 AM

கரூரில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை : பாலியல் தொல்லை என கடிதம்; போலீஸ் விசாரணை

கரூரில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘பாலியல் தொல்லையால் சாகும் கடைசிப் பொண்ணு நானாதான் இருக்கணும்’ என்று அவர் எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது. இந்தக் கடிதத்தை போலீஸார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் புறநகர் பகுதியைச் சேர்ந்த தந்தையை இழந்து, தாயின் பராமரிப்பில் இருந்த 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அவரது தாய், கரூரில் கடை வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து மாணவி வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், பக்கத்து வீட்டு மூதாட்டியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வீட்டுக்குள் சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் கார்த்திகை தீபம் என்பதால் அவரது வீட்டில்இரவு 7 மணிக்குப் பிறகும் விளக்குஏற்றாததால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டு மூதாட்டி, மாணவியின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டியுள்ளார். ஆனால், பதில் இல்லாததால், வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது, அந்த மாணவி தூக்கில் சடலமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து வந்த வெங்கமேடு போலீஸார் மாணவியின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது, வீட்டில் அந்த மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில், 'பாலியல் தொல்லையால சாகுற கடைசி பொண்ணு நானாதான் இருக்கணும்' என்று குறிப்பிட்டு இருந்தார். ஏடிஎஸ்பிகீதாஞ்சலி தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்தாததால், வெங்கமேடு இன்ஸ்பெக்டர் கண்ணதாசனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டிஐஜி சரவண சுந்தர் நேற்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x