Published : 19 Nov 2021 03:08 AM
Last Updated : 19 Nov 2021 03:08 AM

கோவையில் நடைபெற்ற மக்கள்சபை கூட்டங்களில் - 1.41 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன : அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

கோவையில் 150 இடங்களில் மக்கள் சபை கூட்டம் நடத்தப்பட்டு, 1.41 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கோவையில் பெய்துவரும் தொடர்மழையால் நொய்யலைச் சார்ந்துள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பிவிட்டன. இந்நிலையில், கோவை வாலாங்குளத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையால் கோவை மாவட்டத்தில் உள்ள 27 குளங்களில் 26 குளங்கள் முழுவதுமாக நிரம்பியுள்ளன. வாலாங்குளம் நிரம்பி, நீர் செல்லும்பாதை குறுகலாக உள்ளது. அது சரி செய்யப்படும். கோவை மாவட்டத்தில் 7 பள்ளிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. அதை மோட்டார் வைத்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மின்வெட்டு குறித்து பொய் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். கோவையில் மின்வெட்டு பிரச்சினை எங்கும் இல்லை. பாதிப்பு உள்ள பகுதியை தெரிவித்தால், அங்குள்ள பிரச்சினை உடனடியாக சரிசெய்யப்பட்டு மின்விநியோகம் அளிக்கப்படுகிறது. கோவையில் 150 இடங்களில் மக்கள் சபை கூட்டம் நடத்தப்பட்டு, 1.41 லட்சம் மனுக்களை பெற்றுள்ளோம். அவற்றை துறைவாரியாக பிரித்து அனுப்பி, நேரில் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை மாநகராட்சியில் உள்ள சாலைகள் மிக மோசமாக உள்ளன. கடைவீதி பகுதிகளில்கூட சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. எனவே, சிறப்பு நிதியை பெற்று சாலைகளை புதுப்பிக்க இருக்கிறோம். எவ்வளவு மழைவந்தாலும் எதிர்கொள்ளும் வகையிலும், மழைநீர் தேங்காத அளவுக்கு வடிகால் அமைக்கும் திட்டமிடல் கோவைக்கு தேவையாக உள்ளது. அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, முதல்வரின் அனுமதி பெற்று பணிகளை தொடங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x