Last Updated : 13 Nov, 2021 03:09 AM

 

Published : 13 Nov 2021 03:09 AM
Last Updated : 13 Nov 2021 03:09 AM

ஆறு மாதமாகியும் கரோனா பணிக்கான ஊக்கத் தொகை வழங்கவில்லை : ஊர்க்காவல் படையினர் ஏமாற்றம்

ஆறு மாதமாகியும் கரோனா தடுப்பு பணிக்கான ஊக்கத் தொகை வழங்கப்படாததால் ஊர்க்காவல் படையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாதத்தில் 5 நாட்கள் வரை பணி வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ரூ. 550 ஊக்கத்தொகை அல்லது வெகுமதி வழங்கப்படுகிறது. திருவிழா, மாநாடு போன்ற நிகழ்ச்சிகளின்போது இவர்களுக்கு கூடுதல் பணிவாய்ப்பு வழங்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊர்க்காவல் படையினருக்கு வாகனம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

காவல்துறையில் சேரும் கனவு நிறைவேறாத, சமூக சேவையில் ஆர்வமுள்ளவர்கள் ஊர்க்காவல் படையில் சேர்கின்றனர். இருப்பினும் அவர்களுக்கான குறைந்தபட்ச சலுகைகள், ஊக்கத்தொகை கூட உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை எனப்புகார் எழுந்துள்ளது.

மதுரையில் ஓராண்டுக்கு முன்பு கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 700 பேருக்கு 90 நாட்களுக்கான ஊக்கத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை.

இதுகுறித்து ஊர்க்காவல் படையினர் கூறியதாவது: மதுரை நகரில் கரோனா பரவல் காலத்தில் 350 பேரும், புறநகரில் சுமார் 400 பேரும் பணிபுரிந்தோம். நாள் ஒன்றுக்கு ரூ. 560 ஊக்கத்தொகை வீதம் 90 நாட்களுக்கு பணம் வழங்கவில்லை.

இதுகுறித்து பொறுப்பாளர்களிடம் கேட்டால், தமிழகம் முழுவதுமே ஊக்கத்தொகை வழங்கவில்லை எனக்கூறுகின்றனர்.

முன்களப் பணியாளர் என்ற அடிப்படையில் எங்களுக்கும் ரூ. 5 ஆயிரம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். எங்களுக்கான உபகரணங்களும் (கிட்) தாமதமாகவே வழங்கப்பட்டன. எங்களுக்கு உரிய நேரத்தில் ஊக்கத்தொகை வழங்கவேண்டும். ஆண்டுக்கு இரு இலவச சீருடைகளை உரிய காலத்தில் வழங்கவேண்டும். வெளியூரில் வேலைக்குச் சென்றால் அதற்கு உணவுப்படி கிடைப்பதில்லை. சேவை நோக்கில் பணிபுரிய வந்தாலும் எங்களுக்கான ஊக்கத்தொகை, சலுகையை எதிர்பார்ப்பதில் தவறு இல்லை எனக் கருதுகிறோம். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து ஊர்க்காவல் படை பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், ‘‘ கரோனா காலத்துக்கான ஊக்கத்தொகை தொடர்பாக நினைவூட்டல் கடிதம் அனுப்பி உள்ளோம். பிற நாட்களில் பணிபுரிவதற்கான ஊக்கத்தொகை கடந்த மாதம் வரை பாக்கி இல்லை. கரோனா காலத்திற்கான ஊக்கத் தொகையை வழங்க ஏடிஜிபி அளவிலான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கான முயற்சி நடக்கிறது, ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x