Published : 28 Oct 2021 03:06 AM
Last Updated : 28 Oct 2021 03:06 AM

தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியவுடன் - புதிய கட்சி தொடங்கி பாஜக.வுடன் தொகுதி பங்கீடு : பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் உறுதி

‘‘புதிய கட்சி தொடங்கி பாஜக.வுடன் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படுத்துவேன்’’ என்று பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் திட்டவட்டமாக தெரிவித்தார்.

பஞ்சாப்பில் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. ஆனால், அவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் வெளிப்படையாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அத்துடன் அமரீந்தர் எதிர்ப்பையும் மீறி, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் நியமிக்கப்பட்டார். அதன்பின், முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் ராஜினாமா செய்தார். அவருக்குப் பதில் பஞ்சாப் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பொறுப்பேற்றார்.

இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்து அமரீந்தர் சிங் பேசினார். அதனால், அமரீந்தர் பாஜக.வில் இணைவார் என்று செய்திகள் வெளியாயின. இந்நிலையில், சண்டிகரில் நேற்று அமரீந்தர் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பஞ்சாபில் நான் புதிய கட்சி யைத் தொடங்கப் போகிறேன். தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியவுடன் புதிய கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்த விவரங்களை அறிவிப்பேன். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அல்லது சுக்தேவ் சிங் தின்சாவின் ஷிரோமணி அகாலி தளம் (சன்யுக்த்) கட்சியுடன் கூட்டணி குறித்து யாருடனும் நான் இதுவரை பேசவில்லை. ஆனால், அவர்கள் தொகுதிப் பங்கீடு வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். பாஜக, ஷிரோ மணி அகாலி தள கட்சிகளுடன் கூட்டணியா அல்லது தொகுதிப் பங்கீடா என்பது குறித்து நேரம் வரும்போது தெரிவிப்பேன்.

ஆனால், பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸை தோற்கடிக்க, ஷிரோமணி அகாலி தளம், ஆம் ஆத்மி, எனது புதிய கட்சி ஆகியவை இணைந்து எதிர்க்க வேண்டும்.

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம். புதியகட்சியில் இணைய காங்கிரஸ்தலைவர்கள் பலர் காத்திருக் கின்றனர். அவர்களுடைய பெயர் களை இப்போதைக்கு வெளியிட விரும்பவில்லை. ஏற்கெனவே எனது ஆதரவாளர்களுக்கு மிரட் டல் விடுக்கப்படுகிறது.

பஞ்சாபில் கடந்த 2017-ம்ஆண்டு தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இருந்தோம். கடந்த நான்கரை ஆண்டுகள் எனது ஆட்சியில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறேன். பஞ்சாபில் ஏதோ தவறு நடக்கிறது. நான் ஜோதிடன் அல்ல. ஆனால், ஏதோ தவறாக இருக்கிறது. இதுகுறித்து பஞ்சாப் காங்கிரஸ் அரசுதான் மக்களிடம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். மக்களை மாநில அரசு ஏமாற்றக் கூடாது.

பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சித்து எந்தத் தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவோம். பஞ்சாப் காங்கிரஸுக்குள் சித்துவந்த பிறகு கட்சி தனது செல்வாக்கை 25 சதவீதம் இழந்துவிட்டது.

இவ்வாறு அமரீந்தர் சிங் கூறினார்.

இந்நிலையில், அமைச்சர் அமித் ஷாவை மீண்டும் சந்திக்க அமரீந்தர் சிங் நேற்று டெல்லி சென்றார். அப்போது பஞ்சாப் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்து வார்கள் என்று தெரிகிறது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x