Published : 27 Oct 2021 03:08 AM
Last Updated : 27 Oct 2021 03:08 AM

அரசு பொது மருத்துவமனையில் - லஞ்சம் கேட்கும் ஊழியர் குறித்து தெரிவிக்க புகார் பெட்டிகள் :

சென்னை அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளிடம் லஞ்சம் கேட்கும் ஊழியர்கள் குறித்து தெரிவிப்பதற்காக புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஆயிரக்கணக்கானோர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளிடம் ஊழியர்கள் பணம் கேட்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

நோயாளிகளை வீல் சேரில் அமர வைத்து கொண்டு செல்வதில் இருந்து ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளுக்கும், நோயாளிகளிடம் ஊழியர்கள் பணம் கேட்பதாகக் கூறப்படுகிறது.

இத்தகைய ஊழியர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் மருத்துவமனை முழுவதும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக டீன் தேரணிராஜனிடம் கேட்டபோது, “நோயாளிகளிடம் பணம் கேட்கும் ஊழியர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பணம் கேட்கும் ஊழியர்கள் குறித்து நோயாளிகள் நேரடியாக வந்து புகார் கொடுக்க தயக்கம் காட்டுகின்றனர்.

எனவே, அவசர சிகிச்சைப் பிரிவு உட்பட 25 இடங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பணம் கேட்கும் ஊழியர்கள் குறித்த தகவல்களை பேப்பரில் எழுதி புகார் பெட்டியில் போடலாம். அந்த புகாரின் உண்மைத் தன்மையை அறிந்து, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தினமும் வரும் புகார்களைச் சேகரிக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x