Published : 25 Oct 2021 03:10 AM
Last Updated : 25 Oct 2021 03:10 AM

சென்னை ஐஐடி-யில் கல்வி பயில தேர்வான அரசுப் பள்ளி மாணவருக்கு ஆட்சியர் நிதியுதவி :

சென்னை ஐஐடி-யில் கல்வி பயில இடம் கிடைக்கப்பெற்ற அரசுப் பள்ளி மாணவருக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு நேற்று ரூ.85,000 நிதியுதவி வழங்கினார்.

திருச்சி மாவட்ட பள்ளிக் கல்வித் துறையும், திருச்சி என்ஐடி-யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பை கடந்த 2019-ம் ஆண்டு முதல் வழங்கி வருகின்றன. திருச்சி என்ஐடி-யில் உள்ள IGNITE மன்ற மாணவர்கள் ஜேஇஇ பயிற்சியை சிறப்பாக வழங்கி வருகின்றனர்.

அதன்படி, இங்கு பயிற்சி பெற்ற மருங்காபுரி வட்டம் செவல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் பி.அருண்குமாருக்கு, சென்னை ஐஐடி-யில் கல்வி பயில இடம் கிடைக்கப் பெற்றுள்ளது. இவர் ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தரவரிசைப் பட்டியலில் பொதுப் பிரிவில் 12,175-வது இடமும், ஓபிசி பிரிவில் 2,503-வது இடமும் பெற்றுள்ளார்.

இதையடுத்து, மாணவர் அருண்குமாரை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு நேற்று நேரில் வரவழைத்துப் பாராட்டி மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ.35,000 மற்றும் மாவட்ட நலப் பணி நிதியிலிருந்து ரூ.50,000 என மொத்தம் ரூ.85,000-க்கான காசோலைகளை வழங்கினார். இதற்காக தமிழக அரசுக்கும், ஆட்சியருக்கும் மாணவர் அருண்குமார் நன்றி தெரிவித்தார்.

2021- 2022-ம் ஆண்டுக்கான பயிற்சிக்கு மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஜேஇஇ பயிற்சி பெற்று வருகின்றனர். இந்தப் பயிற்சி தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு வார இறுதி நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும் நடைபெறும்.

பயிற்சிக்கான முழு செலவு, உணவு, தங்குமிடம் உள்ளிட்ட செலவினங்களை மாவட்ட நிர்வாகம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x