Published : 22 Oct 2021 03:07 AM
Last Updated : 22 Oct 2021 03:07 AM
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நவம்பர் 1-ம் தேதி நடைபெறுகிறது.
கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றன. காலை 7.30 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
காலை 10 மணிக்கு மேல் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து நந்தி, கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
மண்டகப்படிதாரர்கள், கோயில் முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் திருப்பதிராஜா, கம்மவார் மகளிர் மேல்நிலைப் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் ஆழ்வார்சாமி, சைவ வேளாளர் சங்கத் தலைவர் தெய்வேந்திரன், தமாகா நகரத் தலைவர் ராஜகோபால், கோயில் நிர்வாக அலுவலர் நாகராஜன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 7 மணிக்கு புஷ்ப சப்பரத்தில் வெளிபிரகாரத்தில் அம்மன் திருவீதியுலா நடைபெற்றது.
விழா நாட்களில் தினமும் இரவு 7 மணிக்கு பல்வேறு வாகனங்களில் வெளிபிரகாரத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறும். வரும் 29-ம் தேதி தேரோட்டம், நவம்பர் 1-ம் தேதி கோயில் மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT