Published : 21 Oct 2021 03:06 AM
Last Updated : 21 Oct 2021 03:06 AM
பாரத்நெட் திட்டத்தை முதல்கட்டமாக 6,429 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்துவதற் கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் த.மனோ தங்கராஜ் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவேக அலைக்கற்றை மூலம் இணைய சேவை வழங்க பாரத்நெட் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. தமிழகத்தில் 12,525 கிராம பஞ்சாயத்துகளுக்கு இணையச் சேவை வழங்க ரூ.1815.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
அதன்படி, தகவல் தொழில் நுட்பத்துறையின் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (பைபர்நெட் கழகம்) பாரத்நெட் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஏ,பி,சி,டி என்ற 4 தொகுப்புகளாக மாநிலத்தைப் பிரித்துள்ளது.
இந்நிலையில், சி தொகுப்பில் உள்ள நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள 3,326 கிராம பஞ்சாயத்துகளும் டி தொகுப்பில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி,தூத்துக்குடி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள 3,103 கிராம பஞ்சாயத்துகளுக்கும் பாரத்நெட் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக எல் அண்டு டி, ஐடிஐ, பிஇசிஐஎல் ஆகிய நிறுவனங்களுடன் பைபர்நெட் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் நேற்று இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து அமைச்சர் த.மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்க நிறுவனங்களை அமைக்கும் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்துக்கு மெருகூட்டும் விதமாக பாரத்நெட் திட்டத்தின் சி, டி தொகுப்புகளில் பணியை மேற்கொள்ளத் தேவையான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது.
கடந்த ஆட்சியில் பாரத்நெட்திட்டத்தைச் செயல்படுத்துவதற்குப் போடப்பட்ட டெண்டரை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், திட்டத்தின் ஏ, பி தொகுப்புகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், அதனை தற்போது செயல்படுத்த முடியவில்லை. எனவே, சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசனை செய்து சி,டி தொகுப்புகளுக்கு ரூ.435 கோடிமற்றும் ரூ.432 கோடி நிதி ஒதுக்கி, பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் இணைய வசதி தற்போது நல்ல முறையில் உள்ளது. எனவே, பாரத்நெட் திட்டம் முழுமையாக முடிந்த பின்னர், நகர்ப்புறங்களில் கண்ணாடி இழை கம்பி வடம் கொண்ட தமிழ்நெட் திட்டம் செயல்படுத்தப்படும்.
மேலும், தென்மாவட்டங் களில் தொழில்நுட்ப பூங்காஅமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் நீரஜ் மித்தல், பைபர்நெட் கழக மேலாண்மை இயக்குநர் எ.கே.கமல் கிஷோர், பொது மேலாளர் திவாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT