Published : 21 Oct 2021 03:06 AM
Last Updated : 21 Oct 2021 03:06 AM
இடைநிலைக் கல்வி பயிலும் மாணவர்களின் தனித்திறனை வளர்க்க மத்திய கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும்‘கலா உத்சவ்’ போட்டிகளை நடத்தி வருகிறது.
நடப்பாண்டில் கரோனா தொற்றால், புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் இப்போட்டிகள் நடைபெற்றன. நடனம், இசைக்கருவி மீட்டல் மற்றும் ஓவியம் உட்பட 9 பிரிவுகளில் புதுச்சேரி - 221, காரைக்கால்-92, மாஹே-41, ஏனாம்-69என விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இப்போட்டிகளுக்கான மதிப்பீடு நேற்று காலை அந்தந்த மாவட்ட பள்ளிக்கல்வி இயக்ககங்களில் நடைபெற்றன. நிகழ்வுக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரராசு தலைமை தாங்கினார். ‘சமகர சிக்க்ஷா’ திட்ட இயக்குநர் தினகர், கூடுதல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். பள்ளிக்கல்வி இயக்குநர் ருத்ர கவுடு போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டிகளின் ஒவ்வொரு பிரிவிலும் வல்லுநர்களின் குழு சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்தது. இப்போட்டிக்கான ஏற்பாடுகளை ராதாகிருஷ்ணன், பாரதிராஜா மற்றும் பால்பவன் பயிற்சியாளர்கள் செய்திருந்தனர்.
ஒவ்வொரு போட்டியிலும் மாவட்ட அளவில் ஒரு மாணவர், ஒரு மாணவி வீதம் 9 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வான 72 பேர்களும் நவம்பர் 11-ம் தேதி நடைபெறும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT