Published : 19 Oct 2021 03:08 AM
Last Updated : 19 Oct 2021 03:08 AM

விடுதியில் தற்கொலை செய்துகொண்டவரின் உடலை - காலியிடத்தில் வீசி சென்ற இருவர் கைது :

எழும்பூரில் தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொண்டவரின் உடலை, காலியிடத்தில் வீசிச் சென்ற விடுதி மேலாளர், பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றின் பின்புறம் உள்ள காலியிடத்தில் கடந்த 9-ம் தேதி அடையாளம் தெரியாத, சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. எழும்பூர் போலீஸார் அந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தது ஆந்திர மாநிலம் வாரங்கலை சேர்ந்த ராஜ் குமார் (45) என்பதும், கடந்த 3-ம் தேதி காலை தொடர்புடைய விடுதியில் அறையை எடுத்து, அதில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.

அவர் தற்கொலை செய்துகொண்டதை அறிந்த விடுதி மேலாளரான தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பீர்முகம்மது (54), விடுதி பணியாளரான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரவி (47) ஆகிய இருவரும் சேர்த்து ராஜ்குமாரின் உடலை யாருக்கும் தெரியாமல் விடுதியின் பின்புறம் வீசிவிட்டு சென்றுள்ளனர். பின்னர் இருவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். கடந்த 9-ம் தேதி அவர்கள் பணிக்கு வந்து பார்த்தபோது அந்த உடல் அங்கேயே கிடந்துள்ளது.

இதையடுத்து ஒன்றும் தெரியாததுபோல், எழும்பூர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர். போலீஸாரின் தொடர் விசாரணையில் இது தெரியவந்துள்ளது. இதையடுத்து அடுத்தவருடைய நிலத்தில் உடலை வீசியது, தடயங்களை அழித்தது, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்தது, பொய்யான தகவல் கூறி புகார் அளித்தது ஆகிய குற்றங்களுக்காக மேலாளர் பீர்முகமது, பணியாளர் ரவி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x