Published : 18 Oct 2021 03:11 AM
Last Updated : 18 Oct 2021 03:11 AM

விடுதியில் மகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை :

மாமல்லபுரம்

மாமல்லபுரத்தில் தனியார் விடுதி அறையில் தங்கியிருந்த சென்னையைச் சேர்ந்த தந்தை, மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து, அதே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையை ஓட்டேரி பிரிஸ்லி நகரில் வசித்தவர் ரவிச்சந்திரன்(47). இவரது மனைவி கடந்த 2018-ம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால், மகள் தீட்சிதாவுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி மாமல்லபுரம் பகுதிக்கு மகளுடன் வந்தவர் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார். மேலும், மாமல்லபுரத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களை மகளுடன் சுற்றிப் பார்த்தார். மகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்களை வாங்கிக் கொடுத்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் விடுதி அறைக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்திவிட்டு விடுதியை சிறிது நேரத்தில் காலி செய்வதாகக் கூறியுள்ளார்.

பின்னர், சென்னையில் உள்ள உறவினருக்கு, தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தெரிவித்துவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இந்நிலையில், விடுதியில் இருந்து ரவிச்சந்திரன் வெளியே வராததால் போலீஸாரின் துணையோடு விடுதி அறையை திறந்துப் பார்த்தனர்.

இதில், மகளுக்கு விஷம் அளித்து கொலை செய்துவிட்டு, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. மேலும், அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் ‘விரக்தியால் தற்கொலை செய்து கொள்வதாக’ ரவிச்சந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, போலீஸார் உடலைகளை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x