Published : 17 Oct 2021 03:10 AM
Last Updated : 17 Oct 2021 03:10 AM
பனங்குடியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன ஆலை விரிவாக்கத்துக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்து, அந்நிறுவனத்தின் முன்பு 6 ஊராட்சிகளைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் பனங்குடியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்துக்காக பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம், உத்தமசோழபுரம், குத்தாலம், முட்டம் ஆகிய ஊராட்சிகளில் 622 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தங்களின் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி, இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை அண்மையில் நடத்தினர்.
இந்நிலையில், கையகப்படுத்தப்பட்ட விவசாய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மறுவாழ்வு நலச்சங்கம் சார்பில், பனங்குடி, கோபுராஜபுரம் உட்பட 6 ஊராட்சிகளைச் சேர்ந்த விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டோர், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன வாயில் முன்பு நேற்று கருப்புக்கொடியேந்தி, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நிறுவனத்துக்கு எதிரே உள்ள சாலையின் இருபுறமும் கருப்புக் கொடியேந்தி வரிசையாக நின்று, அந்நிறுவனத்தைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். ஏராளமான பெண்கள் நிறுவனத்தின் வாயிலில் அமர்ந்து ஒப்பாரி வைத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இப்போராட்டம் நடைபெற்றது.
பின்னர், விவசாயிகளின் எதிர்ப்பை மீறி விளைநிலங்களை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் கையகப்படுத்தினால், அடுத்தக்கட்டமாக மிகப்பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என நலச்சங்க விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துவிட்டு, அனைவரும் கலைந்துசென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT