Published : 16 Oct 2021 06:11 AM
Last Updated : 16 Oct 2021 06:11 AM
புதுடெல்லி: சத்தீஸ்கரில் பக்தர்கள் கூட்டத்தில் வேகமாக வந்த கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். சுமார் 20 பேர் காயம் அடைந்தனர்.
வட மாநிலங்களில் தசரா பண்டிகை நாட்களில் துர்கை அம்மன் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதும் பின்னர் அம்மன் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதும் வழக்கம். இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜஷ்பூர் மாவட்டம் பத்தல்கான் என்ற கிராமத்தில் துர்கை அம்மன் சிலையை நீர்நிலையில் கரைக்க பக்தர்கள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று பக்தர்கள் கூட்டத்தில் புகுந்து அவர்கள் மீது ஏறியது. பிறகு அந்த கார் அருகில் உள்ள சுக்ரபாரா நோக்கிச் சென்றது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காரை விரட்டிச் சென்றனர். ம.பி. பதிவு எண் கொண்ட அந்த கார் சிறிது தொலைவில் சாலையோரத்தில் தீப்பிடித்து எரித்து கொண்டிருந்தது. காரிலிருந்து தப்பிச் சென்ற ம.பி.யை சேர்ந்த பப்லு விஷ்வகர்மா (21), சிஷுபால் சாகு (26) ஆகிய இருவரை போலீஸார் பின்னர் கைது செய்தனர். இதனிடையே கார் மோதியதில் கவுரவ் அகர்வால் (21) என்பவர் உயிரிழந்தார். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் கடந்த 3-ம் தேதி விவசாயிகள் மீது கார் மோதியில் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்வலைகள் இன்னும் ஓயாத நிலையில் அதுபோன்ற மற்றொரு சம்பவம் சத்தீஸ்கரில் நேற்று நடந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT