Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் ஒரு வாக்கு பெற்ற பாஜக நிர்வாகி :

கோவை குருடம்பாளையம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, சுயேச்சையாக போட்டியிட்ட பாஜக நிர்வாகி ஒரு வாக்கு மட்டுமே பெற்றுள்ளார்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது குருடம்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டுஉறுப்பினர் பதவி சமீபத்தில் காலியானது. இந்த வார்டில் மொத்தம் 1,551 வாக்காளர்கள் உள்ளனர். காலியாக உள்ள 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, கடந்த 9-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

இத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களாக திறவுகோல் சின்னத்தில் ந.கந்தேஷ், சீப்பு சின்னத்தில் செ.ஜெயராசு, கட்டில் சின்னத்தில் ஆ.அருள்ராஜ், கார் சின்னத்தில் தீ.கார்த்திக், சங்கு சின்னத்தில் ப.வைத்தியலிங்கம், பெயின்ட் பிரஷ் சின்னத்தில் ப.ரவிக்குமார் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். மொத்தமுள்ள வாக்காளர்களில் 913 பேர்தங்களது வாக்குகளை செலுத்தினர்.

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று காலை 8 மணிக்கு குருடம்பாளையம் ஊராட்சி 9-வது வார்டுஉறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் சுயேச்சையாக போட்டியிட்ட திமுக பிரமுகர் ஆ.அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவருக்கு அடுத்தபடியாக செ.ஜெயராசு 240 வாக்குகளும், ப.வைத்தியலிங்கம் 196 வாக்குகளும், ந.கந்தேஷ் 84 வாக்குகளும், ப.ரவிக்குமார் 2 வாக்குகளும், தீ.கார்த்திக் ஒரு வாக்கும் பெற்றனர். ஒரு வாக்கு பெற்ற தீ.கார்த்திக் கோவை பாஜக இளைஞரணிமாவட்ட துணை தலைவர் ஆவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x