Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM

தொடர் மழையால் நிரம்பியது - பில்லூர் அணையிலிருந்து உபரிநீர் திறப்பு :

தொடர் மழையால் பில்லூர் அணை நேற்று நிரம்பியது. அணையில் இருந்து விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால், நீர் மட்டம் கிடு கிடுவென உயர்ந்தது. 100 அடி உயரம் கொண்ட அணையில், நீர்மட்டம் நேற்று மதியம் 97.5 அடியை கடந்தது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. 4 மதகுகள் வழியாக விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.

இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் யாரும் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல்கள் மூலம் ஆற்றை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையினரும் கரைப் பகுதிகளில் பாதுகாப்பு உபகரணங்களுடன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x